தேர்தல் வாக்குறுதி படி ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், உட்பட பலர் தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ரக்க்ஷித், துவக்க உரையாற்றினார். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் காமராஜ் நிரைவுறையாற்றினார்.
இதில், 2021 தேர்தல் வாக்குறுதிபடி பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்ட அநீதி களையபட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள, 30 சதவீதத்திற்கும் மேலான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும், 25 சதவீதமாக வழங்க வேண்டும்.
21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Behind News Acham Thavir Nenjam Nimir